இந்த நிழற்படத்தை என்னுடைய அலைபேசி வழியாக நேற்று காலையில் படம் பிடித்தேன், அலங்காநல்லூர் செல்கிற வழியில் இருக்கிறது இந்த நிறுவனம், 1974 ஆம் ஆண்டு வாக்கில் பால்கோவா தயாரித்து விற்கும் ஒரு சிறிய குடும்பமாக இருந்தது இந்த நிறுவனம்.
இந்த நிழற்படத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கும் திரு.கணேசன் என்கிற பெரியவர்தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், இன்று காலையில் அந்தப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தின் குழந்தைகள் தொழிற்சாலைகளைப் பார்வையிடும் நிகழ்வுக்காக வருகை தந்தார்கள்.
குழந்தைகள் தானே இந்த உலகின் நம்பிக்கையும் புன்னகையுமாக இருக்கிறார்கள், கலகலவென்று தங்களுக்குள் தங்கள் ரகசிய மழலை குரலில் பேசியபடி அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு பேரொளியும், மகிழ்ச்சியும் பெருகத் துவங்கியது.
பார்வையிட்டபடி குழந்தைகள் தாத்தாவை சூழ்ந்து கொண்டார்கள், மனிதர் இயற்கை விவசாயம், வேதி உரங்களற்ற உணவுப் பயிர்கள், காந்திய சிந்தனைகள் என்று அந்தப் பகுதியில் புகழ்பெற்றவர், விவசாய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் சென்று இயற்கை உணவு மற்றும் விவசாயம் குறித்து உரையாற்றுபவர்.
குழந்தைகளைப் பார்த்தவுடன் அவரது கண்களில் எல்லையற்ற மகிழ்வும், கொண்டாட்டமும் பெருகத் துவங்கியது. அவர்களை அருகில் அழைத்து தானும் ஒரு குழந்தையாக மாறி நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அடுத்த குழுவாக மாணவர்கள் வெளியே வெயிலில் காத்திருக்கிறார்கள் என்று பணியாளர் ஒருவர் வந்து சொன்னவுடன் நெற்றிக்கண் திறந்து “குழந்தைகளை வெயிலில் காக்க வைத்திருக்கிறீர்களே?” என்று வருந்திக் குரல் கொடுத்தார். போகும் போது குழந்தைகள் அனைவருக்கும் நிறுவனத்தின் தயாரிப்பான கடலை மிட்டாய்ப் பொதி ஒன்றை வழங்கி மகிழ்ந்தார்.
Bharath Snacks என்ற பெயரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம், இதில் என்ன தனிச்சிறப்பு என்கிறீர்களா? இருக்கிறது. இந்த நிறுவனத்தை முற்று முழுதாக இயக்குவது பெண்கள் மட்டும்தான்.
தயாரிப்பு, மேலாண்மை, எந்திரங்கள் சீரமைப்பு என்று எல்லாப் பிரிவுகளிலும் பெண்களே தலைமையேற்று நடத்துகிறார்கள், யாருக்கும் பெரிய அளவில் கல்வி அறிவில்லை, ஆனால் அனுபவத்தின் வழியாக நவீனத் தொழில்நுட்ப எந்திரங்களை அவர்களே இயக்குகிறார்கள், 70 வயது முதியவர்களும் இதில் அடங்குவார்கள்.
குடிசையில் பால்கோவா தயாரிக்கிற குடும்பமாக இருந்து இன்று ஆண்டுக்கு 20 கோடி நிதிச்சுழற்சி செய்கிற நிறுவனமாக 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தோடு உயர்ந்து நிற்கிறது. வழமையான தொழில் நிறுவனங்களின் வாசமில்லை.
கொஞ்சம் பெரியவர்களுக்கு அண்ணன்களாக, இளையவர்களுக்குத் தகப்பன்களாக எந்தப் பகட்டும் இல்லாமல் எளிய சக மனிதர்களாக வலம் வருகிறார்கள் நிறுவனர் திரு.கணேசன் நல்லமுத்து அவர்களும், மேலாண்மை இயக்குனர் திரு.பழனிவேல் நல்லமுத்து அவர்களும்.
ஏறத்தாழ 70 உணவுப் பொருட்கள் இரண்டு வெவ்வேறு தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது, செயற்கை வண்ணங்கள், பதப்படுத்தும் வேதிப் பொருட்கள் எதுவுமில்லை. பெரிய குடும்பத்தின் சமயலறையைப் போலிருக்கிறது தொழிற்சாலைகள்.
கடலையும், எள்ளும், தேங்காயும் வெல்லத்தோடு கலந்து இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உடல்நல மேம்பாடு குறித்து ஒரு மருத்துவ ஆய்வுக்கட்டுரையே எழுதலாம்.
வெள்ளை மற்றும் கறுப்பு எள்ளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களில் இருந்து கிடைக்கும் இரும்புச் சத்தும், மெக்னீசியமும் பிற C விட்டமின்களும் உடலில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதில் மகத்தான பங்கு வகிக்கிறது.
குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களின் பயன்களையும், தேவைகளையும் விளக்கியதோடு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்களின் தீமைகள் குறித்தும் அவர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கினார் பெரியவர் கணேசன்.
குழந்தைகள் விடைபெற்ற பிறகும், நீண்ட நேரம் அவர்களின் மாசற்ற புன்னகையும் கொண்டாட்டமும் காற்றில் மிதந்துபடி இதயத்தை இலகுவாக்கியது.
நிறுவனத்தின் தயாரிப்புகளை Online ல் வாங்கிப் பயனடைய http://www.bharathsnacks.in என்ற இணைய முகவரியை சொடுக்குங்கள்.