வங்கிக் கடனில் உள்ள வீட்டை விற்க முடியுமா..?
வங்கியில் கிடைக்கும் கடன் மூலம் வீட்டை கட்டத் தொடங்கிய பின் வாங்கிய வங்கிக் கடனை கட்ட முடியாமல் வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவதுண்டு. இந்நிலையில் வங்கியில் கடன் இருக்க வீட்டை எப்படி விற்பது என்ற கேள்வி எழுவது இயற்கையே.! வீட்டின் மீது கடன் இருக்க வீட்டை விற்பதில் தவறில்லை. அதற்கான நடைமுறையை சரியாக கையாள வேண்டும். முதலில் வீடு வாங்குவரிடம் வீட்டின் மீதான கடன் விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதே போல் வீட்டை விற்கப் போகும் தகவலை வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.
வீட்டை மொத்த கிரையத்திற்கு வாங்க நினைப்பவர் முதலில் வங்கியில் உள்ள கடனை அடைத்து வீட்டை வங்கியிலிருந்து மீட்பார். இதன் பின்னரே வங்கியிலிருக்கும் ஆவணங்கள் கிடைக்கப் பெறும். அந்த ஆவணங்களை வீடு வாங்கியவர் பெற்றுக் கொள்வார். பின்னர் உங்களுக்கு மீதமுள்ள தொகையை செலுத்திவிட்டு வாங்குபவர் பெயரில் வீட்டை பத்திரப் பதிவு செய்து வீட்டை முழு உரிமை கொள்வார். இது தான் கிரைய நடைமுறை. உங்களிடமிருந்து வீட்டை வாங்குபவரும், வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு வாங்குகிறார் எனில் வீட்டிற்கான ஆவணங்களை ஏற்கனவே உள்ள வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளும். இந்த நடைமுறையின் மூலம் நீங்கள் வங்கிக் கடனிலோ அல்லது வெளிநபர் கடன் மூலமாகவோ வீட்டை விற்கலாம்.