திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 183 பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களை ஏற்றி செல்லும் 1233 தனியார் பள்ளி வாகனங்களை தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.05.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்து தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கயிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டுநர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும் எனவும் ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும் எனவும் பயணத்தின் போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும், பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும, முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுடன் அவசர நேரத்தில் அந்த கதவை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து விளக்கத்தை பயன்படுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
வாகனத்தில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும், மேலும் வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் தெளிவாக தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தில் பொருத்த வேண்டும். ஓட்டுநர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.
கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை ஓட்டுநர்கள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. எனவே ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்பு முறை குறித்து மாவட்ட தீ யணைப்பு துறையின் சார்பிலும், முதலுதவி எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழு சார்பிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக இன்று (28.05.2025) 183 பள்ளிகளைச் சேர்ந்த 846 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், 783 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், 63 வாகனங்களில் சில குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்து மிண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் மிதமுள்ள வாகனங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின்போது, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவசுப்ரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.ப.சுரேஷ்பாபு, திரு.த.நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.ச.செந்தில்குமார், திரு.சு.செந்தில், திரு.பா.அருண்குமார், திரு.அ.முகமது மிரான், விக்னேஷ் வித்யாலயா பள்ளியின் முதல்வர் திரு.தயாநந்தன், தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.