அன்பே ‘BSNL’ !
(அன்பே டயானா ! என உருகிப்பேசும் தொனியில் படிக்கவும்)
இன்று, நேற்றல்ல, ஏறக்குறைய 18 ஆண்டு காலம், எனது அலைபேசியில் ‘இதய ராணியாக உன்னை வீற்றிருக்கச் செய்தேன்’.
பல சூழல்களில் என்னை கைவிட்டிருக்கிறாய், நீ. எவர் என்னை அழைத்தாலும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக, நீயாகவே பதில் சொல்லிக் கொண்டாய்.
இணைய வசதி வேகத்திலாவது எனக்கு உதவியிருக்கலாம், அதுவுமில்லை. என் பொறுமையை சோதித்து, அதில் பரவசமடைந்தாய்.
இருந்தும் இத்தனை ஆண்டு காலம் உன்மீது நான் கொண்ட நேசத்தின் காரணமாக உனைப் பிரிய மனமின்றி, பொறுமை காத்து வந்தேன்.
என்றாவது நீ திருந்தி விடக்கூடும். மற்றவர்களைப் போல் இல்லாவிடினும், அவசரத்தேவையின் போதாவது எனைத் தொடர்பில் வைத்திடுவாய் என நம்பினேன்.
எனது நம்பிக்கையை தொடர்ந்து அவநம்பிக்கையாக்கி வந்ததால், வேறுவழியின்றி உனைப் பிரியும் முடிவுக்கு வந்திருக்கிறேன்.
சட்டப்படியான நம் இருவரின் பிரிவு நடைமுறைகளுக்காக நான் அனுப்பிய கோரிக்கை ஓலையை, ஏற்று நீயும் ஒப்புதல் அளித்துவிட்டாய்.
நன்றி !
உனைப் பிரியும் இந்நொடியில் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான், “எங்கிருந்தாலும் வாழ்க”…
( குறிப்பு: நடிகர் “ரவி மோகன் – ஆர்த்தி” தம்பதியினர் பிரிவு பரபரப்பாக பேசப்படும் இந்நேரத்தில், எங்களது பிரிவை எவரும் இணையத்தில் ஊதிப் பெரிதாக்கிட வேண்டாம்.
எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இருவரின் மன அமைதியை காத்து உதவிடுமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ச.பாலசுப்ரமணியன்.
அரியலூர்.