பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகம் இருக்கும் இடங்களில் அதனைத்தான் மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
PNG என்பது குழாய் வழியாக நேரடியாக வீடுகளுக்கு கேஸ் விநியோகிக்கப்படுவதாகும். இதனால், பயனர்களுக்கு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதோ அல்லது காத்திருப்பதோ போன்ற பிரச்சனைகள் இல்லாமல், தொடர்ச்சியான எரிவாயு விநியோகம் கிடைக்கும். இந்த PNG பயன்படுத்துவதன் மூலம் அவசர காலங்களில் எரிவாயுவை உடனடியாக முழுமையாக நிறுத்த முடியும். இது ஒட்டு மொத்த மக்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாகவே அமைந்துள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பி.என்.ஜி. இணைப்புக்கு மாற, வீடுகளுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் என்று தெரிவித்தார்.
அதற்குள் பி.என்.ஜி இணைப்புக்கு மாறத் தவறினால், எல்பிஜி எரிவாயு விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எல்பிஜிக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவுவதால் அதனை சரிசெய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர் பதிவுத் தபால் மூலம் ஒரு கடிதத்தில் தகவல் வழங்கப்படும், மேலும் தகவல் வழங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நுகர்வோர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜிக்கு மாற வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார்.
எனினும் குறிப்பிட்ட சில இடங்களில் பி.என்.ஜி. இணைப்பு வழங்குவது சாத்தியமற்றது என சப்ளையரால் சான்றிதழ் வழங்கப்பட்டால் அவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் சுஜாதா சர்மா கூறினார்.



