திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.
பிப்ரவரி 9ஆம் தேதி திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் எண்ணற்ற பறவைகள் விடப்பட்டிருக்கிறது. பூங்காவில் பறவைகளுக்கு நீங்களும் உணவளிக்கலாம், அவற்றுடன் உரையாடலாம், பார்வையாளர்கள் பூங்காவின் சிறப்பம்சங்களை காண 7டி மினி திரையரங்கமும் பூங்காவில் அமைத்திருக்கிறார்கள்.
2023ல் தொடங்கப்பட்ட திருச்சி பறவைகள் பூங்காவின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவிலான பறவைகள் பூங்காவில் தமிழகத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நில அமைப்புகள் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வண்ண வண்ண பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பறவைகளுக்கு ஏற்ப குடில்களும், கூண்டுகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
சுருள் ரெக்கை, பொமேரியன் பெளட்டர், கேட பெளட்டர், கிளி மூக்கு, வைர புறா, டம்ளர் முகம், கட்ட வால், பூ ரெக்கை, போண்டா புறா, அழகு ஹோமர், கேரியர் புறா, மாக்பை பெளட்டர், அரசன், செம்பு புறா ஆகிய புறா வகைகளும், குருவிகள், கிளிகள், கோழியினங்கள், நெருப்புக்கோழிகள், ஈமுக்கள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கோய் மீன் குளம் அமைக்கப்பட்டு அங்கு கண் கவர் மீன்களும் விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
பூங்காவில் 50 பார்வையாளர்கள் அமரும் வகையில் 7டி மினி திரையரங்கமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு முப்பரிமாணத்தில் படங்களை காணலாம். அதோடு ரியல் டைம் விளைவு என்று சொல்லக்கூடிய காட்சி அமைப்பிற்கு ஏற்ப காட்டுப்பகுதியில் இருப்பது போல பார்வையாளர்கள் உணர முடியும் என தெரிவித்திருக்கிறார்கள்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைந்திருக்கிறது. இதனால் மிக எளிதாக பூங்காவை அடையலாம் எனவும் பெரியவர்களுக்கு கட்டணமாக 200 ரூபாயும், சிறியவர் கட்டணமாக 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.