ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே சார்பில் முதன்முறையாக, அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் பார்சல் அனுப்புவதற்கென தனி ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இருசக்கரம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பார்சல்கள் வழக்கமான பயணிகள் ரயிலில் ஓரிரு பெட்டிகளில் இணைக்கப்பட்டு தற்போது அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், பார்சல்களை அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக, டிசம்பர் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் புறப்படும் பார்சல் ரயில், டிசம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை ராயபுரத்தில் புறப்படும் பார்சல் ரயில், மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு மங்களூரு சென்றடையும். சென்னை-மங்களூரு இடையிலான இந்த பார்சல் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணனூர் உட்பட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் தலா 23 டன் பார்சல்களை ஏற்றலாம் என்றும், ரயில்வே துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்கு சென்னை ராயபுரத்தில் தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அடுத்தகட்டமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


