ஒருமுறை சுவைத்து விட்டாலே மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஸ்வீட் ஐஸ் பீடாவை சாப்பிட்டதுண்டா!
இந்த ஐஸ் பீடா உலகளவில் பேமஸ் என்கிறார்கள். இதை சுவைத்தால் சாப்பாடு எளிதில் ஜீரணமாகும், ரத்த ஓட்டம் சீராகுமாம். பீடா போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருச்சியிலேயே மிகவும் பிடித்த கடையும் இந்த மஹாய் பீடா கடைதானாம். அசைவ பிரியர்கள், சைவ பிரியர்கள் என உணவை ஆவலுடன் தேடி சாப்பிடும் நபர்களுக்கு திருச்சி கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில் அருகே உள்ள மஹாய் பான் பீடா கடை பிரபலம்…
தினமும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் மஹாய் பான் பீடா கடையின் உரிமையாளர் சுரேஷ்சிங்கை சந்தித்து பேசினோம்.
“19 வருடங்களுக்கும் மேல இந்த கடைய நடத்தி வந்துட்டு இருக்கோம். எங்களுக்கு பெங்களூர், கோவைலயும் கூட கடை இருக்கு. பீடாவில 18 வகை பீடா இருக்கு. ஆனா நம்ம கடையில இந்த ஸ்வீட் பீடாதான் ரொம்ப பேமஸ். பீடாவுக்கு வெற்றிலை தான் முக்கியம். நாங்க இந்த மஹாய் வெற்றிலைய பீகார்ல இருந்து வாங்கிதான் பீடா செய்றோம். அந்த மஹாய் வெற்றிலைக்கு மட்டும் தான் இப்படி ஒரு தனி சுவை கிடைக்கும்.
இதுகூட குஜராத்தில் கிடைக்கிற சோனாமந்தி மூலிகையையும் சேர்த்துகிறோம். இந்த மூலிகை வாய், குடல்ல இருக்க புண்களை சரிசெஞ்சிடும். இந்த மூலிகை கலந்த பீடாவை சாப்பிட்டா எந்த நோயும் வராது. வெற்றிலை செரிமானத்துக்கு உதவும். இனிப்பு பீடா எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஸ்வீட் பீடாவில் சுண்ணாம்பு, பாக்கு சேர்ப்பதில்லை. உலர வைத்த பழங்கள், ரோஜா இதழ்கள், இனிப்பு வகைகள், குங்குமப்பூ இவைகளை தான் சேக்குறோம்.
மஹை வெற்றிலையை மென்னு சாப்பிட்டா அது தானாவே கரைஞ்சிடும். நீரழிவு நோய் இருக்குறவங்க சாதா பீடா சாப்பிடறது நல்லது.
குறைஞ்சபட்சம் 2 நாள் பிரிட்ஜ்ல வைச்சு சாப்பிடலாம்.
இதுலயே தங்க பஸ்பம் சேர்த்து கொடுத்தா அது கோல்ட் பீடான்னு சொல்லுவோம். நிச்சயதார்த்தம், கல்யாணம், காதுகுத்துன்னு சுப காரியங்களுக்கு இங்க இருந்து மொத்தமா ஆர்டர் பண்ணி வாங்கிட்டு போவாங்க. திருச்சியில் நிறைய அரசியல் தலைவர்கள், டாக்டர்கள் எனக்கு ரெகுலர் கஸ்டமர்ஸ்.
ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்ன்னு வெளிநாட்டுகளுக்கு நண்பர்கள் மூலமா திருச்சி ஐஸ் பீடான்னு சொல்லிவச்சு வாங்கிட்டு போறாங்க.
என்னென்ன பீடா வகை கிடைக்கும்?
ஐஸ் பீடா( ஸ்வீட் பீடா), சில்வர் பீடா, கோல்ட் பீடா, சாதா பீடா.