Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம்

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம்

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் திருச்சிராப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம், சியட்ரான் கருத்தரங்கு, பொறியாளர்கள் தினவிழா, பதவியேற்பு விழா என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நாட்குறிப்பு வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26ம் தேதி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி, ஸ்வார்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுமான பொறியாளர்கள் சங்க நாட்குறிப்பினை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வெளியிட்டு பேசும் போது, “எந்த நாட்டில் கட்டடம் உயர்ந்து வளர்ந்து இருக்கிறதோ அதுவே வளர்ச்சி என கருதப்படுகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் தான் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. நாட்டினுடைய பொருளாதாரம் முதல் அனைத்தையும் தீர்மானிக்கிறது கட்டிடங்கள். ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது கட்டுமானம் என்றால் அதற்கு காரணமாக இருப்பது இன்ஜினியர்கள் தான். இப்படி வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இன்ஜினியர்களாக இருக்கின்றார்கள்.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு மக்கள் அதிகளவில் செல்கிறார்கள் என்றால் அந்த நாட்டினுடைய கட்டுமானத் துறை வளர்ந்து இருக்கிறது என்பதன் அடையாளம் அது. பொறியாளர்களுக்கு தான் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு திருச்சியில் வசிக்கும் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ‘யுகா’ பெண்கள் அமைப்பின் தலைவி அல்லிராணி பேசும் போது, “பொறியியல் துறை என்பது சிந்தனை இயல்துறை. அவர்கள் சிந்தனையின் தோற்றமே பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் மாபெரும் கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் காலத்தில் இருந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் சிந்தனையின் உதயமே மாபெரும் கோயில்கள், கட்டிடக்கலைகள் ஆயிரமாண்டு தாண்டிய கட்டிடங்களாக உள்ளது. அதற்கு தலைசிறந்த சிந்தனைகளே காரணம். இப்படியான சிந்தனைகளை தற்போது நவீன தொழில் நுட்பத்தோடு இணைந்திருக்கிறது. அதை பொறியாளர்கள் வகுத்துக் கொண்டு இருக்கின்றனர். மிகப் பெரிய கட்டிடங்கள் வானுயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் கட்டி எழுப்பும் அளவிற்கு பொறியாளர்கள் சிந்தனை வளர்ந்திருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத கட்டிடங்கள் எல்லாம் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தங்கள் கற்பனைகளை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி வருகின்றனர் பொறியாளர்கள்.

தலைவர் தென்னரசுவின் ஓராண்டுகால பணிகள்:
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் திருச்சிராப்பள்ளியில் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுள்ள இ.தென்னரசு, மாவட்ட திமுக பொறியாளரணி துணை அமைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். வாத்தியாளர் குளத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபத்தினை நீதிமன்றம் சென்று அப்புறப்படுத்திய சமூக சேவகர். சங்கத்தில் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றபின் இவரது ஓராண்டு கால பணிகள் :
-திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து நகர்ப்புற கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு தொடர்பான செயல்பாடுகள்.
– முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்களிடம்யிடம் கட்டுமான பொருட்கள் விலையேற்றம் குறித்து மனு வழங்கியது.
– நகர்ப்புற அமைச்சரை சந்தித்து, அப்ரூவல் பணிகள் செய்வதற்கு கட்டுமான பொறியாளர்கள் அமர ஏதுவாக மாநகராட்சி, நகராட்சி பஞ்சாயத்து அலுவலகங்களில் அறை ஒதுக்க வேண்டி கோரிக்கை வைத்தது.
– வர்த்தகர்கள்-பொறியாளர்கள் சந்திப்பு
– உறுப்பினர்களுக்கு தீபாவளி வெடி வழங்கியது
– உறுப்பினர் மறைவிற்கு சேமநலநிதி வசூலித்து ரூ.1.5 லட்சம் வழங்கியது.
– உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் அளவிலான இன்சூரன்ஸ் செய்தது
– கொரோனா நிவாரண நிதி ரூ.2,55,000த்தை மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கியது
– சங்கத்திற்கு நகர்ப்புற பகுதியில் இடம் வாங்கியது
– 1500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது
– சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டி வருவது
– மாநில கூட்டமைப்பிற்கான அலுவலகம் திருச்சியில் அமைப்பது
– நாட்குறிப்பினை சிறப்பாக வடிவமைத்து வெளிக்கொண்டர்ந்த செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தங்கமோதிரம் பரிசாக புத்தாண்டு விழாவில் வழங்கியது.
– உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கியது
– தொழில்நுட்ப கூட்டங்கள், செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களை சிறப்பாக நடத்தியது

இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு கட்டுமானத்துறையிடம் உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறையின் ஆணிவேராக இருப்பது பொறியாளர்கள். பொறியாளர்களின் செயல்பாடு கட்டுமான வணிகத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சி” என்று கூறினார்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் தென்னரசுவின் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கலாம் என்று முடிவு செய்து நாட்குறிப்பு குழு மூலமாக விழாவில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் காற்று மாசு, சுகாதாரக்கேடு, பெட்ரோல், டீசல் சிக்கனம் என்ற பல்வேறு சமூக நோக்கங்களை வலியுறுத்தி இலவச ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் மக்களுக்கும் சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து உழவர் சந்தை மைதானம் வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

இவ்விழா நிகழ்வுகள் தலைவர் இ. தென்னரசு, செயலாளர் வீ. சிவகுமார், பொருளாளர் வீ‌.வெங்கடேசன், இணை செயலாளர் எம்.இருதயராஜ், உடனடி முன்னாள் தலைவர் கே.ராமகணேசன், புத்தாண்டு குழுத் தலைவர் டி.தினகரன், நாட் குறிப்பு தலைவர் ஆர்.ஜெயராம் மற்றும் முன்னாள் தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

கட்டுமான துறை பொறியாளர்கள் கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் தென்னரசு நம்மிடம் கூறுகையில், கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு பொறியாளர் சங்கம் பல நேரங்களில் எடுத்துச் சென்றிருக்கிறது. இப்படி திருச்சி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் கோரிக்கைகளில் முதலாவதாக இருப்பது கட்டுமான பொருட்களின் மீது திடீர் விலையேற்றம்.

சிமெண்ட், இரும்பு, பிளம்பிங், எலக்ட்ரிகல், பெயிண்ட் என்று அனைத்துப் பொருட்களுமே 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை விலை ஏற்றத்தை கண்டிருக்கிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து போக்குவரத்து சார்ந்த கட்டுமானத்துறை பொருட்கள் கூடுதல் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. அதோடு உற்பத்தியாளர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப விலைகளை உயர்த்திக் கொள்வதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு கட்டுமான துறை ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த ஆணையம் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேலும் விலை ஏற்றத்தின் போது பொதுமக்கள் கட்டுமானத் துறை சார்ந்த நிபுணர்கள், உற்பத்தியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் வைத்த ஆலோசித்து முடிவு வெளியிடப்படும் நிலை வந்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படமாட்டார்கள். ஏழை எளிய மக்கள் தங்களுடைய வாழ்நாளில் அதிகம் செலவு செய்வது கட்டுமானத்திற்கு மட்டும் தான். அதில் திடீர் விலையேற்றம் மக்களை நேரடியாக பாதிக்கிறது. முதலில் கொரோனா கட்டுமானத் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பிறகு மழை, தற்போது விலை ஏற்றம் இப்படி கட்டுமானத் துறையில் சிறிய சரிவு ஏற்பட்டது.

பொறியாளர்கள் ஆணையம் (ENGINEERS COUNCIL) :
ஒவ்வொரு துறைக்கும் துறை சார்ந்த தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆணையங்கள் இருக்கின்றன. ஆனால் இன்ஜினியரிங் துறை இந்தியாவின் முக்கிய அடிப்படை துறைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் பொறியாளர்களுக்கான தொழில் பாதுகாப்பு என்பது இல்லை. இதை உறுதி செய்யும் வகையில் பொறியாளர்கள் ஆணையம் (ENGINEERS COUNCIL) இன்ஜினியர் கவுன்சிலை அமைக்க வேண்டும். பொறியாளர்கள் ஆணையம் இருந்தால் கட்டுமானத்துறை சார்ந்த ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும்.


சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்திற்கு பிறகு அரசு தனியார் கட்டுமானங்கள் நடைபெறும்போது இன்ஜினியர் மேற்பார்வை வேண்டும் என்றெல்லாம் பல சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் பிறகு அவை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இஞ்சினியரிங் கவுன்சிலிங் வருவது இன்ஜினியருக்கான தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மக்களுடைய பொருளாதார பாதுகாப்பு, வாழ்வியல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பயணிக்கும்.

10,000 உறுப்பினர்களை கொண்ட பொறியாளர்கள் கூட்டமைப்பு
“கட்டுமான பொறியாளர்கள் சங்கம் திருச்சிராப்பள்ளி, ஒரு அரசு பதிவு பெற்ற சங்கம். இச்சங்கம் பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 250 படித்துப் பட்டம் பெற்ற பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேற்படி சங்கமானது அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என்ற கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. மேற்படி கூட்டமைப்பின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 90 சங்கங்கள் இணைந்து பத்தாயிரம் பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

திருச்சியின் வளர்ச்சிப் பணியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி யின் பங்கு அளப்பறியது. வீடுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று பல்வேறு கட்டடங்களுக்கு மூளையாக செயல்பட்டு வருகின்றனர். திறமை வாய்ந்த நபர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இச்சங்கத்தில் இந்த ஆண்டு மாவட்டத் தலைவர் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு சங்கத்திற்கென இடம் வாங்கி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்திற்கான அலுவலகமும் திருச்சியில் கட்டப்பட உள்ளது. பொறியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களையும் தொழில் பாதுகாப்பையும், சமூக சிந்தனைகளையும் வளர்க்கும் இச்சங்கத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் : 97900 33206, 98424 64146, 94431 45999

மேலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் நகர மேம்பாட்டு ‌அமைப்புக் குழு போன்ற பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு பல்வேறு குழுக்களுக்கு அரசால் அமைக்கப்படுகின்றது. ஆனால் அந்தக் குழுக்களில் இன்ஜினியர்களை சேர்ப்பது கிடையாது, இன்ஜினியர்களை‌யும் குழுக்களில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு பகுதியினுடைய வளர்ச்சியில் இஞ்சினியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இன்ஜினியர்கள் இல்லாமல் அரசு ஒரு குழுவை இயக்கும் பொழுது அந்தக் கட்டமைப்பை சரியாக தீர்மானிக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் பஞ்சாயத்து தலைவருக்கு 10,000 சதுர அடிக்கு அப்ரூவல் கொடுக்க அரசு அதிகாரம் வழங்கி உள்ளது. ஆனால் பஞ்சாயத்து தலைவர்கள் அப்ரூவல் வழங்கும் பொழுது இன்ஜினியர்களின் மேற்பார்வையில் மட்டுமே அப்ரூவல் வழங்கினால் முறைப்படியான உறுதியான தொழில்நுட்பத்துடன் கட்டுமானங்கள் அமையும். மேலும் கட்டட வரைபடம் முறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

-இப்ராகிம்

Leave A Reply

Your email address will not be published.