தமிழகத்தில் ஜீலை முதல் மின் கடடணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருவதாகவும், இதன்படி மின் கட்டணம் கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் 2023-இல் ஜீலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் வீட்டு மின் நுகர்வோர் வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் என பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்கட்டணமும் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, 2024 ஜீலை மாதம் 4.8 அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்தான், நிகழாண்டு ஜீலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு பரிந்துறை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, மின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் என்றாலும், எவ்வளவு உயர்த்த வேண்டும் என்பதை துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் முதல்வர் இது குறித்த முடிவுகளை எடுப்பார். மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வரும் ஜீலை 1-க்குள் வெளியாகலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.