படிப்போம் பகிர்வோம் முடிவில்லாப் பயணமாக சிறப்பு நிகழ்ச்சி
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து படிப்போம் பகிர்வோம் முடிவு இல்லா பயணமாக சிறப்பு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.
நூலகர் புகழேந்தி வரவேற்றார். புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில்
படிப்போம் பகிர்வோம் முடிவில்லாப் பயண நிகழ்ச்சியானது அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் நிகழ்வாகும்.

காகிதத்தில் இருந்து கணினி, அலை பேசி என அனைத்திலும் வாசிக்க பழகிக் கொண்டோம் ஆனால் புத்தகத்தின் மணம் தருகிற இன்பம் அலாதியானது. புத்தகத்தை வாசிப்பதைப் போன்ற அனுபவத்துக்கு ஈடு இணையே இல்லை. அதுபோன்ற தருணங்கள் ஒரு வரம்.
புத்தகங்கள் அமுதசுரபியைப் போன்றவை. படிக்கிறவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத கருத்துகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன என்றார்.
படித்ததில் பிடித்தது குறித்து அண்ணாதுரை பேசுகையில்,
புத்தகங்களை வாசிக்கும்போது நான் மெய்மறந்து கரைந்திருக்கிறேன்.
ஏவிஎம் 60 சினிமா நூலினை எம்.சரவணன் தொகுத்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் பல கதாநாயகர்கள் ஒவ்வொரு காலத்திலும் நடித்துள்ளார்கள் அதில் குறிப்பிடத்தக்கவர்
சிவாஜி கணேசன் ஆவார்.
கலைஞர் எழுதி சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் அக்காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது அந்த கிரேஸ் எங்களையும் பற்றி கொண்டது பராசக்தி படம் வெளிவந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் இன்றளவும் உணர்வுபூர்வமாக உள்ளது என்றார்.
நிகழ்வில் சந்திரசேகரன், ஆல்பர்ட், பாத்திமா, கருணாகரன், உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.