இந்தியாவில், மாதந்தோறும் புதிய கடன்களுக்காக, 2.2 கோடி நுகர்வோர்கள் விண்ணப்பிப்பதாக, ‘எக்ஸ்பீரியன்’ மற்றும் ‘இன்வெஸ்ட் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
’இந்திய கடன் சூழலமைப்பின் ஒரு மீளாய்வு’ என்ற தலைப்பில், நடத்தப்பட்ட ஆய்வில், உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளை விட, அதிக விகிதத்தில் இந்தியாவின் நுகர்வோர் கடன் சந்தை வளரும் எனவும், இந்தியாவின் மக்கள் தொகையில் ஏற்பட்டு வரும் மாற்றமே, இதற்கு முக்கிய காரணம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நுகர்வு செலவு, பிரேசில் போன்ற நாடுகளை விட, இரு மடங்குக்கு அதிகமாக உள்ளது. தனிப்பட்ட இறுதி நுகர்வு செலவு, 5 ஆண்டுகளில் நிலையாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் குடும்ப கடன், 5 ஆண்டுகளில், 13 % அதிகமாக உள்ளது. கடந்த 2000-2021 வரை, இந்தியாவின் உள்நாட்டு கடன் வளர்ச்சி சராசரியாக, 15.1 % அதிகரித்துள்ளது.
சில்லரை கடன்கள் மற்றும் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணம்.மாதந்தோறும், 2.2 கோடி நுகர்வோர்,புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்திய நுகர்வோர் கடன் சந்தை அதிக விகிதத்தில் விரிவடைந்து வருகிறது.
கடந்த 2017 மார்ச் முதல், 2021 பிப்., வரை, இந்தியாவின் கடன் சூழலமைப்பு, இந்திய சந்தைகளில், ’வி’ வடிவிலான மீட்சி இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.