HDFC வங்கி அதன் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. ரூ.3 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 23ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னதாக, 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெபாசிட்டுக்கான வட்டியை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.
FD விகிதக் குறைப்புக்குப் பிறகு, வங்கி பொது குடிமக்களுக்கு 3% முதல் 6.85% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.35% வரையிலும் FD வட்டி விகிதங்களை வழங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். முன்னதாக, வங்கி பொது குடிமக்களுக்கு 3% முதல் 7.10% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.55% வரையிலும் FD வட்டி விகிதங்களை வழங்கியிக்கிறார்கள்.
தற்போது மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதம் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே ஆகும். ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் கொண்ட பொது மக்களுக்கான டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை வங்கி 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, 6.60% முதல் 6.50% வரை இருக்கும். 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் கொண்ட FD-களுக்கு, வங்கி 20 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, 7.05% முதல் 6.85% வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒரு நாள் முதல் மூன்று ஆண்டுகள் வரை, வங்கியின் வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 6.90% முதல் 6.70% மாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு, ரூ.3 கோடிக்குக் குறைவான தொகைகளுக்கு வங்கி 3.5% முதல் 7.35% வரை FD வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள். 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் 7.35% என்ற அதிகபட்ச FD வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் குறைத்திருக்கிறார்கள். மே 16ஆம் தேதி முதல் அனைத்து முதிர்வு காலங்களின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி குறைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய வட்டி விகிதம் ரூ. 3 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்திருக்கிறார்கள்.
ரூ. 3 கோடிக்கும் குறைவான சில்லறை உள்நாட்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான இந்த வட்டிக் குறைப்பு மூத்த குடிமக்களுக்கும் பொதுவான முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்திய புதிய விகிதங்களின்படி, இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான கால அவகாசம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு இனி 6.7 சதவீத வட்டி கிடைக்கும்.
அதே நேரத்தில், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான கால அவகாசம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி 6.30 சதவீதம் வட்டி கிடைக்கும். மேலும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான கால அவகாசம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.5 சதவீத வட்டி கிடைக்கும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 444 நாட்கள் கால அளவு கொண்ட ‘அம்ரித் விருஷ்டி’ திட்டத்திற்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக, இந்தத் திட்டத்திற்கு 7.05 சதவீத வட்டி கிடைத்தது. ஆனால் இப்போது அதற்கான வட்டி விகிதம் 6.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் மீதான வட்டியின் கூடுதல் நன்மைகள் முன்பு போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 0.10 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரை குறைத்தது. இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்டிக் குறைப்புக்குப் பிறகு, ரெப்போ விகிதம் இப்போது 6 சதவீதமாக மாறியிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது முதலீட்டாளர்கள் தங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் கிடைக்கும் வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எனப்படும் என்பிஎஃப்சியும் டெபாசிட்டுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. அதில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனமும் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவரி முதல் பாலிசி விகிதங்களைக் குறைப்பதற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் இப்போது 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதுமட்டும் இல்லாமல் நீண்ட டெபாசிட்டுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. 18 மாத வைப்புத்தொகை 7.4% அதிகபட்ச வட்டியைப் பெறும், அதே நேரத்தில் 24-60 மாத வைப்புத்தொகை 7.25% மட்டுமே கிடைக்கும். 12-14 மாதங்கள் மற்றும் 15-23 மாதங்களுக்கான குறுகிய கால வைப்புத்தொகைகள் முறையே 7% மற்றும் 7.35% வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 55 அடிப்படை புள்ளிகள் வட்டியாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 5 ஆண்டு காலத்திற்கு 8.2% வழங்குகிறார்கள். அதே நேரத்தில் அஞ்சல் நேர வைப்புத்தொகை 5 ஆண்டு காலத்திற்கு 7.5% செலுத்துகிறது. மூத்த குடிமக்கள் திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ. 30 லட்சம் வரை வரம்பு இருந்தாலும், அஞ்சல் வைப்புத்தொகைகளுக்கு உச்ச வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் 3 மாத லாக்-இன் காலத்திற்குப் பிறகு சில அபராதங்களுடன் பணத்தை எடுக்க முடியும் என்பதால், கார்ப்பரேட் வைப்புத்தொகை சில பணப்புழக்கத்தை வழங்குலதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.