2024-25 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் 616ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் டிவிடெண்டாக வழங்கியது. 2022-2023 நிதியாண்டில் 87,416 கோடி ரூபாய் டிவிடெண்டாக வழங்கியிருக்கிறார்கள். அவசர காலத்தில் நிலைமையை சமாளிப்பதற்கென்று ஒதுக்கப்படும் நிதி சிஆர்பி (Contingent Risk Buffer) என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ரிசர்வ் வங்கி இந்த அவசரகால ஆபத்து தணிப்பு (சிஆர்பி) நிதியை பராமரிக்கும். அந்த நிதி ஆண்டு முடிந்த பிறகு உபரியாக இருக்கும் நிதியை மத்திய அரசுக்கு வழங்குகிறார்கள்.
மேலும் இது உபரி நிதி அல்லது டிவிடெண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிஆர்பி 7.50 சதவீதத்தில் இருந்து 4.50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் கடந்த நிதியாண்டில் 6.50 சதவீதமாக இருந்த சிஆர்பி தற்போது 7.50 சதவீதமாக உயர்த்தபோவதாகவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.