ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் டாடா டெலி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் எனும் வருவாய் பகிர்வு தொகைக்கான வட்டி, அபராதத்தை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி வருவாய் பகிர்வு தொகையை வட்டி, அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடாபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு தொலை தொடர்பு நிறுவனங்களும் மத்திய தொலை தொடர்பு துறைக்கு ஏஜிஆர் எனும் வருவாய் பகிர்வு தொகையை வழங்க வேண்டும். அதாவது அலைக்கற்றையை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றின் கட்டணமாக இது மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் இதனை செய்வது இல்லை. இதுதொடர்பாக கடந்த 2020ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏர்டெல் , வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். வருவாய் பகிர்வு தொகை, அதனை செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி மற்றும் அதற்கான அபராதம் உள்ளிட்டவை கணக்கிட்டு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த உத்தரவிடப்பட்டது.
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.83,400 கோடியும், ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.38,00 கோடியும் நிலுவையாக இருந்தது. ஜியோவுக்கும் பாக்கி உள்ள நிலையில் அது 2016ல் தான் அறிமுகம் ஆனதால் உடனடியாக செலுத்த அறிவுரை வழங்கப்பட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் ஏஜிஆர் தொகை செலுத்துவதற்காக நிதியை திரட்டிவிட்டது. ஆனால், வோடபோன் ஐடியா போதிய நிதியின்றி திணறி வருவதாகவும், இந்தச் சூழலில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே தொலைத் தொடர்பு துறையில் செயல்படும் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து வோடஃபோன் ஐடியா சார்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛‛வருவாய் பகிர்வு பாக்கியாக மொத்தம் ரூ.83,400 கோடி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அசல் பாக்கி ரூ.12,797 கோடி, வட்டி ரூ.28,294 கோடி, அபராதம் ரூ.6,012 கேடி, அபராதத்துக்கான வட்டி ரூ.11,151 கோடியும் அடங்கும். இதனால் வட்டி, அபராதம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து டாடா டெலிசர்வீஸ் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. ஏர்டெல் சார்பில் பாரதி ஏர்டெல் மற்றும் பாரதி ஹெக்ஸாகாம் தாக்கல் செய்த மனுவில், ‛‛வருவாய் பகிர்வு படி ரூ.9,235 கோடி பாக்கி உள்ளது. இதற்கான வட்டி ரூ.21,850 கோடியாகவும், அபராதம் ரூ.3,9995 கோடியாகவும், அபராதத்துக்கான வட்டி ரூ.8,900 கோடியாகவும் உள்ளது. மொத்தம் ரூ.43,980 கோடி கடன் உள்ளது. தொலை தொடர்பு நிறுவனத்தின் கணக்கின்படி மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.38,391 கோடி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி, அபராதம், அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஜேபி பர்திவாலா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்களின் மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி வருவாய் பகிர்ந்து தொகையை வட்டி, அபராதத்துடன் செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள் . இந்த உத்தரவை தொடர்ந்து வோடாபோன் ஐடியாவின் பங்குகள் சரிந்துள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் 10 சதவீதம் வரை வோடாபோன் ஐடியாவின பங்குகள் சரிவை சந்தித்ததாகவும், மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 0.2 சதவீதம் வரை சரிவை சந்தித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.