மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு, குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் தம்பதியினருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனி கணவனும் மனைவியும் தனித்தனியாக வருமான வரி தாக்கல் செய்வதற்குப் பதிலாக, இருவரும் இணைந்து ‘கூட்டு வருமான வரி அறிக்கை’ (Joint Income Tax Return) தாக்கல் செய்யும் புதிய நடைமுறை முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், கணவன் மற்றும் மனைவியின் வருமானம் தனித்தனியாகக் கருதப்படாமல், ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானமாகக் கணக்கிடப்படும். வரி செலுத்துவோர் தங்களின் விருப்பப்படி தனித்தனியாகவோ (Individual) அல்லது கூட்டாகவோ (Joint) வரி தாக்கல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தம்பதியினரின் மொத்த வருமானம் ரூ. 8,00,000 வரை இருக்கும் பட்சத்தில் அவர்கள் எவ்வித வருமான வரியும் செலுத்தத் தேவையில்லை. வருமானம் ரூ. 8,00,001 முதல் ரூ. 16,00,000 வரை இருந்தால் 5 சதவீத வரியும், ரூ. 16,00,001 முதல் ரூ. 24,00,000 வரை 10 சதவீத வரியும் விதிக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்குப் பயனுள்ள வகையில், ரூ. 24,00,001 முதல் ரூ. 32,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும், ரூ. 32,00,001 முதல் ரூ. 40,00,000 வரை 20 சதவீத வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிக வருவாய் ஈட்டும் தம்பதியினருக்கு ரூ. 40,00,001 முதல் ரூ. 48,00,000 வரை 25 சதவீத வரி விகிதமும், ரூ. 48,00,000-க்கு மேல் ஈட்டப்படும் வருமானத்திற்கு 30 சதவீத வரியும் வசூலிக்கப்படும். இந்த அடுக்குமுறை மாற்றங்கள், குறிப்பாக ஒரு நபர் மட்டும் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு அதிக வரிச் சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்த்து, அதிக சம்பளம் வாங்கினால், இந்தத் திட்டத்தின் மூலம் வரிச் சலுகை அதிகமாகக் கிடைக்கும். வருமானம் இருவருக்கும் பிரித்து கணக்கிடப்படுவதால் வரிச் சுமை குறையும். வீட்டுக் கடன் மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவற்றை கூட்டாகக் காண்பிக்கும் போது, இருவருக்கும் கிடைக்கும் சலுகைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இருவருமே நடுத்தரமான சம்பளம் வாங்கினால், அவர்கள் குறைந்த வரி வரம்பிற்குள் (Tax Slab) வர வாய்ப்பு இருப்பதால் லாபகரமாக அமையும்.
கணவன், மனைவி இருவருமே அதிக அளவு சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால், கூட்டு வருமான வரித் தாக்கலில் அவர்களின் மொத்த வருமானம் உயர்ந்து, அதிக வரி விகிதப் பட்டியலுக்குள் (Higher Slab) செல்ல வாய்ப்புள்ளது. இவர்களுக்குத் தனித்தனியாக வரி தாக்கல் செய்வதே லாபகரமாக இருக்கும். இந்த கூட்டு வரித் தாக்கல் என்பது கட்டாயம் அல்ல, இது ஒரு விருப்பத் தேர்வு மட்டுமே. எனவே வரி செலுத்துவோர் தங்களுக்கு எது லாபகரமானது என்பதைக் கணக்கிட்டு முடிவெடுக்கலாம்.



