ஆன்லைன் வர்த்தகத்தால் மவுசு கூடும் பழைய டூவீலர் விற்பனை
நகரத்தின் கடை வீதிகளில் வரிசையாக நகைக் கடை, துணிக்கடை, மளிகைக் கடை என்பது போல் வரிசையாக பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை நடைபெறும் இடம் என்றால் அது திருச்சி, பட்டாபிராமன் சாலையை தான் குறிப்பிட வேண்டும். புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனையாளர் கள் நடத்தும் எக்ஸ்சேஞ்ச் மேளா மூலம் சேகரமாகும் பழைய வாகனங்களை ஏலம் எடுப்பதன் மூலமும் தவணை முறையில் விற்கப்படும் புதிய வாகனங்களுக்கான தவணை தவறுவதால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விடுவதன் மூலமும் பழைய இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு வருகின்றன. இதைத் தாண்டி உடனடி பணத் தேவைக்காக தங்களது வாகனத்தை இத்தகைய கன்சல்டிங் கடைகளில் விற்பதும் உண்டு.
அத்தகைய வாகனங்களை வாங்கி சிறு சிறு பழுதுகளை நீக்கி, வாங்கிய விலை, பழுது நீக்கியதற்கான செலவுடன் குறிப்பிட்ட அளவு லாபம் சேர்த்து பழைய இருசக்கர வாகனங்கள் விற்கப்படுகின்றன. கிங்ஸ் ஆட்டோ கன்சல்டண்ட் நிறுவனம் நடத்தி வரும் பஷீர் அஹமது நம்மிடம் கூறுகையில், ”பட்டாபிராமன் சாலையில் சிறிதும், பெரிதும் என சுமார் 70 கடைகள் உள்ளன. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் விலையுள்ள வாகனங்கள் விற்பனை நடைபெறுகின்றன. நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனை நடைபெறுவதோடு சுமார் ரூ.15 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் போது ஸ்கூட்டி பெப், பல்ஸர் போன்ற வாகனங்கள் அதிகளவில் விற்பனை நடைபெறும். கொரோனா கால தளர்வுகளுக்குப் பின்பு பொதுப் போக்குவரத்து குறைந்த காலத்தில் வாகன போக்குவரத்தினை இருசக்கர வாகனங்களே நிறைவு செய்ததால் புதிய, பழைய வண்டிகள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றன. மைலேஜ் தரும் ஷிறிலிணிழிஞிஹிஸி, சிஜி 100, றிலிகிஜிமிழிகி போன்ற வாகனங்களே அதிகளவில் விற்கின்றன. அதே வேளையில் பல்ஸர், அப்பாச்சி போன்ற வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் கூட தவணை தவறியதால் இங்கு விற்பனைக்கு வருகின்றன. அத்தகைய வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. பழைய இருசக்கர வாகனங்களை தவணை முறையிலும் விற்கிறோம்.
ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களை தாண்டி இங்கும் புரோக்கர்கள் மூலம் வண்டி விற்பனை நடைபெறுகிறது. அத்தகைய வண்டிகளை விற்கும் புரோக்கர்கள் ஒரு வண்டிக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கமிஷன் பெறுகின்றனர். வெளிமாவட்டத்திற்கும் வாகனங்களை அனுப்பி விற்கிறோம்“ என்றார். ஆதவன் மோட்டார்ஸ் உரிமையாளர் கார்த்திக் கூறுகையில்,
”பொருளாதாரத்தில் பின் தங்கிய, வேலை தேடும் இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பாக அமைவது அமேசான், பிளிப்கார்ட், ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் தரும் டெலிவரி பணிகள் தான். அத்தகைய மக்களின் இருசக்கர வாகன தேவையை பூர்த்தி செய்வது ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள் தான்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கான டெலிவரி வேலைக்கு முதல் தகுதி சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும் என்பதால் புதிய, பழைய என இரண்டு இடங்களிலும் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளன” என்றார். ராக்போர்ட் இருசக்கர வாகன கன்சல்டன்ட் நலச் சங்கத்தின் தலைவர் ஏ.சேகர் கூறுகையில், ”திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 கடைகள் வரை உள்ளன. சங்கத்தில் 150 உறுப்பினர்கள் உள்ளனர். புதிய வாகனங்களை விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாகன சாவி, இன்சூரன்ஸ், டெலிவரி லெட்டர், பெயர் மாற்று சான்றிதழ், ஆர்சி புத்தகம் அனைத்தும் வாங்கிய பின்னரே கன்சல்டிங் நிறுவனம் மூலம் விற்கப்படுகின்றன. அவை அல்லாததை தவிர்த்து விடுவோம்.
பெயர் மாற்றாமல் விற்கப்படும் வாகனம், குற்றச்செயலுக்குக் கூட பயன்படுத்தப்படலாம். இதனால் வரும் பிரச்சினைகளை விற்றவரே முதலில் எதிர்கொள்ள வேண்டி வரும். மேலும் விபத்து ஏற்பட்டால், முந்தைய உரிமையாளரே இழப்பீட்டை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். திருட்டு வாகனங்கள் கூட விற்பனைக்கு வரலாம் என்பதால் ரொம்பவும் எச்சரிக்கையாகவே பழைய வண்டிகளை வாங்கி விற்கிறோம்” என்றார்.
செய்தி : எஸ்.வெங்கடபிரசாத்