மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய வசதியால் ஆதார் கார்டை இனி பிரின்ட் அவுட் எடுத்து பயன்படுத்த வேண்டியதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதார் விவரம் தேவைப்படும் இடங்களில் அதன் நகல் மற்றும் எண்ணை அளிப்பதற்குப் பதில் இனி நம் முகத்தைக் காட்டினாலே போதும் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
ஆதார் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளைப் போன்று ஆதார் செயலியில் க்யூஆர் கோட் இருக்கும். அதனை ஆதார் விவரம் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தினால், உடனே கேமராவில் நம் முகத்தை ஸ்கேன் செய்யும் வசதி வரும்.
நம் முகமும், நம் தனிப்பட்ட அடையாள எண்ணான ஆதாரின் விவரமும் சரிபார்க்கப்பட்டு உடனே ஆதார் விவரம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல், பயணம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் விவரம் கேட்கப்படும்போது இதுவரை அதன் நகலைப் பயன்படுத்தி வருகிறோம். அதற்குப் பதிலாக இனி முகத்தை மட்டும் காட்டினால் போதும் என்ற இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.