சிறுபான்மையின மக்களுக்கு (டாப்செட்கோ) மற்றும் (டாம்கோ) மூலம் சுயதொழில் தொழிற்கடன் வழங்கும் திட்டம்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிற்கடன், தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புபவர்கள் 6.02.2025 அன்று அரியலூர் நகர கூட்டுறவு வங்கியிலும், 12.02.2025 அன்று ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 13.2.2025 அன்று ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், 14.02.2025 அன்று செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கடன் பெற பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்குள் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.
கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.