இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-க்கான உள்நாட்டு அமைப்பு ரீதியான முக்கியமான வங்கிகள் (D-SIBs) பட்டியலை வெளியிட்டு, மீண்டும் மூன்று வங்கிகளையே ‘இந்தியாவின் மிக பாதுகாப்பான, மிக முக்கியமான வங்கிகள்’ என அறிவித்துள்ளது. அதில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), எச்டிஎஃப்சி (HDFC) வங்கி மற்றும் ஐசிஐிசஐ (ICICI) வங்கி ஆகிய மூன்று வங்கிகள் இடம்பிடித்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டும் இந்த பட்டியலில் இந்த மூன்று வங்கிகளே இடம்பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த 3 வங்கிகள் ‘மிக முக்கியமானவை’? இந்த மூன்று வங்கிகளின் அளவும், நாட்டின் நிதி அமைப்பில் அவற்றின் பங்கும் மிகப் பெரியது. இதில் ஏதேனும் ஒரு வங்கி திவாலாகினால் அல்லது கடுமையான நெருக்கடியில் சிக்கினால் கூட, முழு நிதி அமைப்பும் பாதிப்படையும் அபாயம் உண்டு. அதனால் தான், அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் இந்த 3 வங்கிகளையும் கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்கின்றன. ஜாக்ரான் பிசினஸின் தகவலின் படி, வங்கிகளின் வலிமை, அளவு, ஆபத்து நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி, இவற்றின் மீது கூடுதல் தொழில்நுட்ப மற்றும் நிதி கண்காணிப்பை மேற்கொள்கிறது.

வங்கிகளின் ஆபத்து மற்றும் அளவைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி அவற்றை இந்த பட்டியலில் பிரிக்கிறது. எஸ்பிஐ – பக்கெட் 4: கூடுதல் 0.80% CET1 மூலதனம். எச்டிஎஃப்சி வங்கி – பக்கெட் 2: கூடுதல் 0.40% CET1 மூலதனம். ஐசிஐசிஐ வங்கி – பக்கெட் 1: கூடுதல் 0.20% CET1 மூலதனம். இந்த கூடுதல் பாதுகாப்பு மூலதன விதிமுறைகள் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த வங்கிகள், சாதாரண வங்கிகளை விட கடுமையான நிதி மேற்பார்வை, அதிக மூலதனக் காப்பீடு மற்றும் நெருக்கடி மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒருவேளை இந்த வங்கிகளுக்கு தீவிர நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்கம் தலையிட்டு இவ்வங்கிகளை மீட்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த மூன்று வங்கிகளும் சேர்ந்து, மொத்த வங்கி துறை சொத்துக்களில் 40-45% பங்கு வகிக்கின்றன.

எனவே, அவற்றின் நிலைத்தன்மை இந்திய வங்கித் துறைக்கும், மேலும் இந்திய பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமானது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, நாட்டின் நிதி அமைப்பை மேலும் பாதுகாப்பாகவும், உறுதியானதாகவும் மாற்றும் முயற்சியில் மிகப் பெரிய படியாகக் கருதப்படுகிறது.


