இந்தியாவிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதி செய்தால் ஊக்கத் தொகை..!
உலக அளவில் பிரபலமான மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு முன்வந்தால் அந்த மொபைல் நிறுவனங்களுக்கு பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை அறிமுகம் செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு அதிகமான நிதியை ஒதுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு ரூ.2,45,000 கோடி மதிப்பிலான மின்னனு மற்றும் மின்சார பொருட்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. நம் மொத்த ஜிடிபியில் இதன் பங்களிப்பு 17 முதல் 18 சதவீதம் ஆகும். இதன் பங்களிப்பை 25 முதல் 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பிஎல்ஐ என்ற உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவின் உள்நாட்டு சந்தை மதிப்பு வளர்வதுடன் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான ஏற்றுமதியை முடுக்குவதால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் அன்னிய செலாவணி வருமானம் கிடைக்கும் என அபெக்ஸ் அவ்லான் கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவர் கிரிஜா பாண்டே தெரிவித்துள்ளார்.