செய்யும் தொழிலில் புதுமை. அது மக்களை ஈர்க்கிறது என்றால் அந்த தொழில் நீடித்து நிலைக்கும். அதற்கு உதாரணம் ஆறுமுகம் ஹோட்டல் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி.
1961ம் ஆண்டில் திருச்சி, பாலக்கரையில் ஆறுமுகம் ஹோட்டலை தொடங்கினார் ஆறுமுகம் பிள்ளை. ஆடு, கோழி இறைச்சியில் பிரியாணி மற்றும் இதர அசைவ உணவுகளை வழங்கி பெயர் பெற்ற ஆறுமுகத்தின் மனதில் உதித்த புதிய சிந்தனை வான்கோழியில் பிரியாணி. ஹோட்டல் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே இந்த புதிய முயற்சியில் கால் பதித்தார். அவரது முயற்சி தோற்கவில்லை. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் மட்டுமே வான்கோழி வளர்ப்பார்கள். அங்கே இங்கே என அலைந்து திரிந்து தான் வான்கோழி கொள்முதல் செய்ய வேண்டும்.
வான்கோழி விலை அதிகம். அத்துடன் கோழிக்கறியுடன் ஒப்பிடும் போது இருமடங்கு மசாலா பொருட்களை பயன்படுத்தினால் தான் பிரியாணி சுவை தரும். கறி வேக இரண்டு மணி நேரமாகும். இதனால் பிரியாணியின் விலையும் அதிகம். எனவே நாள்தோறும் வான்கோழி பிரியாணி விற்பனை சாத்தியமில்லை என முடிவெடுத்து, தீபாவளி பண்டிகை காலங்களில் பொது மக்களிடம் காசு புழங்கும் என்பதால், அப்போது மட்டும் வான்கோழி பிரியாணி விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் வான்கோழி பிரியாணி என்றாலே ஆறுமுகம் ஹோட்டல் தான் ஞாபகத்திற்கு வரும். பத்தடி உயரத்திற்கு ஹோட்டலின் இருபுறமும் பயில்வான்கள் கட்அவுட் வைத்து சீரியல் செட்டுடன் களை கட்டும் வான்கோழி பிரியாணி விற்பனை. பின்னர் திருச்சியில் பல ஹோட்டல்களில் வான்கோழி பிரியாணி விற்பனை நடந்தாலும் ஆறுமுகம் ஹோட்டல் பிரியாணிக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு.
“ஆறுமுகம் ஹோட்டலில் வான்கோழி பிரியாணி சாப்பிட்டால் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிறைவு உண்டாகும்” என சொல்பவர்கள் உண்டு. ஆறுமுகம் பிள்ளைக்கு பின் அவரது மகன்கள் சரவணன், சோலை மற்றும் முருகன் ஆகிய மூவரும் இணைந்து ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.
வான்கோழி பிரியாணி குறித்து நம்மிடம் முருகன் கூறும் போது, ”மண்ணச்சநல்லூர் பகுதியிலிருந்து தான் வான்கோழி வாங்கி வருகிறோம். 1995 வரை கிராமப் பகுதிகளில் தான் வான்கோழி கிடைக்கும். தேவை அதிகரித்த பின் தான் பண்ணை உருவாகத் தொடங்கியது. இப்போது வான்கோழி பண்ணை அதிகளவில் உள்ளது.
எனவே பண்ணையிலிருந்து வான்கோழியை தருவிக்கிறோம். தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பு வான்கோழி பிரியாணி விற்பனை தொடங்கும். தீபாவளி முடிந்து 3 நாட்கள் வரை விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த இரண்டு நாட்களில் கார்த்திகை மாதம் தொடங்குவதால் தீபாவளியை அடுத்து ஒரு நாள் மட்டுமே வான்கோழி பிரியாணி விற்பனை செய்ய உள்ளோம்.
தீபாவளிக்கு முன்பு ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 50 முதல் 100 படி வரை விற்பனை நடைபெறும். தீபாவளிக்கு முதல் நாள் 200 முதல் 300 படி வரை விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தாக்குதல் ஆண்டு என்பதால் விற்பனை எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை” என்றார்.
பொதுவாக திருச்சி மாநகரில் இரவு 2, 3 மணி என எந்நேரமும் பிரியாணி சாப்பிட நினைக்கும் பிரியாணி பிரியர்களுக்கு ஆறுமுகம் ஹோட்டலில் சுடச்சுட பிரியாணி கிடைக்கும். இது பிரியாணி பிரியர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் 10 மணி வரை கடை என்ற அரசின் விதிமுறையினை கடைபிடிக்கிறார்கள்.
வான்கோழி என்பது நமது நாட்டில் மிக பழங்காலம் தொட்டு இருந்து வரும் பறவை இனம் அல்ல என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். ஐரோப்பியர் வருகையின் போது தான் வான்கோழி இந்தியாவிற்கு வந்தது. ஒரு வான்கோழிக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் தீவனம் தேவைப் படும்.
ஆறு மாதத்தில் ஒரு வான்கோழி நாலு கிலோ எடை வந்துவிடும். 100 கிராம் வான்கோழி இறைச்சியில் புரதச்சத்து 29.41 கிராமும். கொழுப்புச்சத்து 3.53 கிராமும் இருக்கின்றன. பாஸ்பரஸ் சத்து 218.82 மில்லி கிராம், சோடியம் 63.53 மில்லி கிராம், பொட்டாசியம் 304.71 மில்லி கிராம், சுண்ணாம்புச்சத்து 18.82 மில்லிகிராம், இரும்புச்சத்து 1.29 மில்லி கிராம் உள்ளன. வைட்டமின்களில் தயமின் 0.071 மில்லி கிராம், ரிப்போஃப்ளேவின் 0.13 மில்லிகிராம், நியாசின் 6.82 மில்லிகிராம் அளவு உள்ளது. கொலஸ்ட்ராலின் அளவு 69.41 மில்லி கிராம் ஆகும். 100 கிராம் வான்கோழி இறைச்சி ஆனது உடலுக்கு 159 கலோரி சக்தியை அளிக்கவல்லது.
சந்தையில் 10 முதல் 20 கிலோ உடல் எடையுள்ள 24 வார வான்கோழி சேவல் ஒன்றை வளர்க்க ஆகும் செலவு ரூ.300லிருந்து ரூ.400 வரை. அதே வான்கோழியினை விற்பனை செய்வதன் மூலம் ரூ.500லிருந்து ரூ.600 வரை லாபம் பெறலாம். இதே போல் பெட்டை ஒன்றை விற்கும் போது ரூ.400லிருந்து ரூ.600 வரை லாபம் பெறலாம். அதிக சுவை கொண்ட வான்கோழி இறைச்சி ஆண்மையை புத்துணர்வு பெற வைக்கும் தன்மை கொண்டதாக சித்த மருத்துவம் கூறுகிறது. வீரியம் வற்றிய ஆண்களுக்கு அதிகப்படியான வீரியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக காம விருப்பம் அதிகமாகும்.