ஏர் இந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கும் டாடா..!
கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற கணக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்தில் மட்டும் 4 முறை விருப்ப விண்ணப்பங்கள் பெறுவதற்காக நாட்களை ஒத்திவைத்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குரூப் களத்தில் இறங்கியுள்ளது.
ஸ்டீல், ஆட்டோமொபைல் முதல் மென்பொருள் சேவை வரையில் பல துறைகளில் தடம் பதிக்கும், 8.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசிற்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தாரா நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டாடா குழுமம் தற்போது சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடனான கூட்டணியில் விஸ்தாராவும், ஏர் ஏசியா பெர்ஹாட் உடனான கூட்டணியில் ஏர் ஏசியா இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் விமானச் சேவை அளித்து வருகிறது டாடா. ஏர் இந்தியாவைக் கைப்பற்றினால் 3 வர்த்தகத்தையும் ஒற்றை நிறுவனமாக மறுசீரமைப்புச் செய்து சேவை அளிக்கும் திட்டமும் டாடா தீட்டியுள்ளது.