Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் எலக்ட்ரீஷியன்களுக்கு தொழில் வாய்ப்பு தரும் ‘யாசிகா’ கண்ணன்

திருச்சியில் எலக்ட்ரீஷியன்களுக்கு தொழில் வாய்ப்பு தரும் ‘யாசிகா’ கண்ணன்

மின்வெட்டால் ஏற்படும் இருட்டு, பலரின் வாழ்க்கையில் பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது. அப்படியானவர்களில் ஒருவர் தான் யாஷிகா பேட்டரிஸ் உரிமையாளரான சண்முகம் (எ) கண்ணனின் வாழ்க்கை.

சண்முகம் (எ) கண்ணன், பள்ளிப்படிப்பு முடித்து ஏழு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றினார். பேட்டரி விற்பனை பிரிவில் பணியாற்றிய கண்ணனுக்கு, அதில் கிடைத்த அனுபவம் சொந்தமாக தொழில் தொடங்கத் தூண்டியது. நீண்ட ஆயுள் கொண்டது என்று பொருள்படும் “ஆயுஷியா’’ என்ற பெயரில் பேட்டரி தயாரித்து விற்கத் தொடங்கினார். மின்வெட்டு பிரச்சனை காரணமாக இன்வெர்ட்டர் தேவைகள் அதிகரித்திருந்த காலம் அது. தொடர்ந்து இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி தயாரித்து (அசம்பிள் செய்து) விற்பனை செய்யத் தொடங்கினார்.

பின்னர் சந்தையில் பிரபலமான ஒரு பிராண்டை கைவசம் கொண்டால் விற்பனை அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் மைக்ரோடெக் நிறுவன இன்வெர்ட்டர்களின் டீலரானார். டீலரான மூன்று மாதத்தில் விற்பனையில் சாதனை படைத்து, தமிழகத்தின் மைக்ரோடெக் நிறுவனத்தின் நம்பர் ஒன் டீலர் என்ற இலக்கை எட்டிப் பிடித்தார். அடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு லூமினாஸின் டீலர்ஷிப் பெற்றார். 2018ம் ஆண்டு வரை அதாவது ஒன்பதாண்டுகள் தொடர்ந்து தென் இந்தியாவின் நம்பர் ஒன் டீலராகவும் இந்திய அளவில் டாப் 5 டீலரில் ஒருவராகவும் உயர்ந்தார். கிட்டதட்ட 70 ஆயிரம் இன்வெர்ட்டர், யுபிஎஸ் விற்பனை செய்து, “லூமினாஸ் கண்ணன்” என்றே அழைக்கப்பட்டார்.

“உழைப்பு, அடுத்தடுத்த உயரத்திற்கு அழைத்துச் சென்றாலும் அணுகுமுறை மற்றும் புதிய யுக்தி தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது என்கிறார் சண்முகநாதன் (எ) கண்ணன். பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும் நம்முடைய பொருள் விற்பதற்கு நுகர்வோரை ஈர்க்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில் பத்திரிக்கைகளில் எனது விளம்பரங்களை தலைகீழாக கொடுத்தேன். அது படிக்கும் நுகர்வோரை எளிதாக கவனிக்க வைத்தது. மேலும் நான் நியமித்த விற்பனையாளர்களின் பெயரிலும் என் செலவில் விளம்பரம் செய்தேன். ஒரே பிராண்டிற்கு வேறு வேறு விற்பனையாளர்கள் பெயரில் விளம்பரம் கொடுக்க அது நுகர்வோர்களை ஏதாவது ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது. விற்பனை அதிகரித்தது.

நான் ஒரு சிறந்த விற்பனையாளர் என்ற பெயர் பெற்றாலும் அதற்கு முக்கிய பங்களிப்பு எலக்ட்ரீஷியன் தான். இதை கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் உள்ள எலக்ட்ரீஷியன்களை டீலராக்கினேன். அவர்கள் பெயரிலும் விளம்பரம் கொடுத்தேன். இந்த யுக்தி எனக்கு இரண்டு வகையில் பயன்பட்டது. ஒன்று விற்பனை அதிகரிப்பு. மற்றொன்று தாமதமின்றி உடனுக்குடன் பழுது சீரமைப்பது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 150 பேரினை டீலராக நியமித்துள்ளேன். இதை படிக்கும் எலக்ட்ரீஷியன் எவரேனும் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் விற்பனை வாய்ப்பை தரத் தயாராக இருக்கிறேன். தற்போது மைக்ரோடெக், எக்சைடு, ஆம்ரான், லூமினஸ், ஒகாயா மற்றும் லீடர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் டீலராக உள்ளேன். மின்வெட்டை அடுத்து மின்கட்டண உயர்வு மற்றொரு விற்பனை வாய்ப்பை உருவாக்கியது. அது சோலார் பேனல் யூனிட் விற்பனை. தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வீடுகளிலும் சோலார் பேனல் பொருத்தும் விழிப்புணர்வு அதிகரித்தது.

ரூ.30 ஆயிரம் முதல் சோலார் யூனிட் அமைத்து தரும் பணியை தொடங்கினேன். சோலார் யூனிட் அமைப்பது நடுத்தர, சாமானிய மக்களுக்கு சாத்தியக் குறைவு என்பதால் அதை நானே இன்ஸ்டால்மெண்ட் முறையில் சந்தைப்படுத்தி வருகிறேன். பஜாஜ் பைனான்ஸ் மூலமும் விற்பனை செய்து வருகிறேன். பத்திரிக்கைளில் மட்டுமின்றி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகிறேன். வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும், 24 மணி நேரத்திற்குள், “விற்பனைக்கு பின் சேவை” வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்றார் கண்ணன்.

தொடர்புக்கு:  98430 67778

Leave A Reply

Your email address will not be published.