முதல் தலைமுறை தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்!
முதல் தலைமுறை தொழில் முனைவோ ராக உருவாக்க தமிழக அரசு “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம் பாட்டுத் திட்டம்” (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இளங் கலை, முதுகலை பட்டய படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ), ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத் தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.
பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதமில்லை. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.5 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் துவங்கலாம். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.