இந்தியப் பொதுத்துறையின் ‘மா மனிதர்’ வி.கே.
இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார் வி.கே என்ற வி.கிருஷ்ண மூர்த்தி.
திட்டக்குழுவின் தலைவர்
தமிழகத்தைச் சேர்ந்த வி.கிருஷ்ணமூர்த்தி எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். இரண்டாம் உலகப் போரின்போது விமான நிலையத் தொழில் நுட்ப வல்லுநராகத் தன் பணியைத் தொடங்கினார். பின்னர், தமிழக மின் வாரியத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தார். இவர் எடுத்த பல்வேறு முயற்சிகளால் மின் வாரியம் சிறப்பான வளர்ச்சியை எட்டியது. இவருடைய திறமையைப் பார்த்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இவரைத் திட்டக்குழுவின் உறுப்பினராகத் தேர்வு செய்தார்.
எந்த வாய்ப்பையும் விட்டுவெக்கல…
பெல் நிறுவனத்தின் திருச்சி நிலையத்தில் தன் 41 வயதில் பொது மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தவர், அங்கு நிகழ்த்திய மாற்றங்கள் மூலம் நாடறிந்த முகமாக வளர்ந்தார். பெல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி உயர்ந்தார்.
எந்தப் பதவியில் இருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட பொறுப்பில் இருந்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை யெல்லாம் செய்தவர். எந்தவொரு வாய்ப்பையும் விட்டு வைக்காததுதான் இவருடைய அத்தனை சாதனைகளுக்கும் அடிப்படை. இதனால் அடுத்தடுத்து வந்த பிரதமர்களுடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு இருந்தது.
சாதனைக்கு காரணம்
தனக்கு சரியென்று பட்ட விஷயத்தை எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மாற்றிக் கொள்ளாத துணிச்சல் கொண்டவர். ஒருமுறை மத்திய தொழில் துறை அமைச்சருடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, கனரகத் தொழில் துறையின் செயலர் பதவியிலிருந்து விலகினார். ஆனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து மாருதி புராஜெக்ட்டுக்கான பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது.
நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு…
இவர் கண்ட சாதனைகளுக்கு காரணம், இவருடைய நிர்வாகத் திறமை மட்டுமல்ல, எடுத்த முயற்சியில் இருந்த பிடிவாதமும்தான். இந்திரா காந்தி பெல் நிறுவனத்தை சிறு சிறு நிறுவனங்களாகப் பிரிக்குமாறு கூறினார். ஏனெனில், இந்திய மேலாளர்களுக்குப் பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமை இல்லை என அவர் நினைத்தார். ஆனால், பெல் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து லாபகரமானதாக மாற்றினார். இவருடைய முயற்சியால்தான் பெல் நிறுவனத்துக்கு பல வெளிநாடுகளின் புராஜெக்ட்டுகள் கிடைத்தன. இன்றும் இந்த நிறுவனம் முக்கியமான பொதுத்துறை நிறுவனமாக விளங்க கிருஷ்ணமூர்த்தி முக்கியமான காரணம்.
அந்நிய முதலீட்டில் பொதுத்துறை நிறுவனம்
இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பின் பொதுத் துறை நிறுவனங்களுக்குத் தேவையான திறமையான பொறியாளர்களையும், நிர்வாகத்தினரையும் அடையாளம் கண்டது மட்டுமல்லாமல், பொதுத் துறை நிறுவனங்களை வலுப்படுத்த அந்நிய முதலீட் டையும் கொண்டுவந்து சேர்த்தார்.
மாருதி புராஜெக்ட்டில் சிறிய கார் உற்பத்தி செய்வதில் சுஸூகி நிறுவனத்தைக் கூட்டு சேர்த்ததில் இவருடைய பங்கு உண்டு.
மாருதி 800 கார் அறிமுகப்படுத்தியது இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிகழ்த்திய சாதனையைச் சொல்லி விவரிக்க முடியாது. பல லட்சக்கணக்கான குடும்பங்களின் ‘கார்’ கனவை அது நிறைவேற் றியது. இதையடுத்து ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செயில் (SAIL) நிறுவனத்தின் பொறுப்பை இவரின் கையில் கொடுத்தார். அதன் வளர்ச்சியிலும் இவர் மகத்தான பங்காற்றினார். அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் இணக்கமான உறவில் இருந்து தொடர்ந்து தேவையான மாற்றங்களைத் தொழில் துறையில் மேற்கொண்டார். இவர் எடுத்துக்கொண்ட பொறுப்புகளுமே மிகுந்த சவால்களும் சிக்கல்களும் நிறைந்தவையாகவே இருந்தன. ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியத் தொழில் துறையை உலக அளவில் போட்டியிடும் தகுதிமிக்கதாக மாற்றினார்.