தமிழகத்தில் மனை வாங்கும் ஆர்வத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ளோர் இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் தேடலில், 75 சதவீதம் பேர் தென்மாநிலங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
குறிப்பாக தென்மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் கவனம் பெறுகின்றன. ஆந்திர மாநிலத்திலிருந்து வெளிநாடு சென்றிருப்போர் இங்கே சொத்து வாங்குவதில் ஆர்வம் பெரிதாக காட்டவில்லை. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவோர்களில் 29 சதவீதம் பேர் குடியிருப்பு மனையை வாங்குவதிலும், 45 சதவீதத்தினர் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்குவதிலும் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். கட்டி முடித்து உடனே குடியேற தயார் நிலையில் உள்ள வீடுகளை விரும்புபவர்கள் எண்ணிக்கை 82 சதவீதமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.