அரசு வர்த்தகத்தில் தனியார் வங்கிகள் கால் பதிக்க அனுமதி..!
அரசு வர்த்தகத்தில் ஈடுபட தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடலாம். இதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட அனைத்து வங்கிகளுக்கும் சமமான வாய்ப்புகளைப் பெறும், இதன் மூலம் வாடிக்கையாளர் சேவையின் தரமும் பெரிய அளவில் உயரும் எனத் தனது டிவீட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆக்சிஸ் வங்கி போன்ற சில வங்கிகளுக்கு மட்டுமே அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டடிருந்த நிலையில், தற்போது அனைத்து தனியார் வங்கிகளும் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளும் அரசு வர்த்தகத்தில் ஈடுபட முடியும் எனக் கூறப்படுகிறது. “மத்திய நிதியமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது மிகவும் முற்போக்கான சீர்திருத்தம். இதன் மூலம் தனியார் வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பங்குகொள்ள முடியும்” என கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.