கொரோனா காலத்தில் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைபெற்றது. உலகம் முழுவதும் பல கோடி பேர் கிரிப்டோகரன்சியில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இந்த மாற்றங்களை தடுக்க உலக நாடுகள் பலவும் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.
உலகிலேயே முதல் முறையாக சீனா, டிஜிட்டல் கரன்சியை மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவும் டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் யூரோ நாணயத்தை முதற்கட்டமாக மக்கள் மத்தியில் சோதனைக்காக அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் டிஜிட்டல் கரன்சி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. டிஜிட்டல் யூரோ மூலம் பணத்தை எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும். இதேபோல் பணத்தை அரசு சிறப்பான முறையில் டிராக் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் கருப்பு பணத்தையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த டிஜிட்டல் யூரோ மூலம் தங்களது ஸ்மார்போன், ஸ்மார்ட்கார்டு மூலம் அனைத்து இடத்திலும் யார் வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்த முடியும்.
இதனால் வெளிநாட்டுப் பேமெண்ட் நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற நிறுவனங்களை நம்பியிருக்கத் தேவையில்லை. இந்த டிஜிட்டல் யூரோ திட்டத்தைப் பயன்படுத்துவதிலும், சேமிப்பதிலும் உள்ள சிக்கல்களையும், ஆபத்துகளையும் ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய மத்திய வங்கி சோதனை அடிப்படையில் தற்போது அறிவித்துள்ளது. இது முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.