தொழில் முறை ஆலோசகர்களின் வழிகாட்டல் யாருக்கெல்லாம் தேவை?
முதலீட்டு விஷயங்களில் உணர்ச்சிபூர்வமாகச் செயல்படாமல், அறிவுபூர்வமாகச் செயல்பட ஓர் உறுதியான துணை தேவை. இதுபோன்ற பல காரணங்களால் தொழில் முறை ஆலோசகர்களின் வழிகாட்டலை நாடுகிறோம்.
- பல வருடங்களாக கைநிறைய சம்பாதித்திருப்போம். கொரோனாகூட நம் வருமானத்தை அசைத்துப் பார்த்திருக்காது. ஆனால், நம் கையிருப்பு என்ன, முதலீடுகள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவு இருக்காது. காரணம், சரியான நிதி நிர்வாகம் இல்லாமல், சேமிக்கத் தவறியிருப்போம்.
- இன்னும் சிலருக்கு ‘வாழ்வில் இதுதான் சேமிக்கும் வேளை; இப்படியான வழிகளில் சேமிக்கலாம்’ என்று நன்றாகவே தெரியும். ஆனால், செயலாக்கம் என்று வரும்போது, ஆயிரம் யோசனைகளால் சேமிப்பும், முதலீடும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு வருட, இரு வருடக் கதையானால் பரவாயில்லை. முடிவே இல்லாமல் தொடருமானால் சம்பாதித்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
- சிலருக்கு பொருளாதார நிர்வாகத்தில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. அதில் தவறொன்றும் இல்லை. எல்லாவற்றையும் நாமே செய்வது என்பது கடினம்; அநாவசியமும்கூட. ஆனால், இவர்கள் பொருளாதார நிர்வாகத்தை மொத்தமாகப் புறக்கணிப்பதுதான் தவறு.
- DIY (Do It Yourself) ) எனப்படும் தானே செய்துபார்க்கும் ஆர்வம் இன்றைய இளம்தலைமுறைக்கு அதிகம். ஆனால், அதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள நேரம் இல்லாமையால் அவ்வப்போது நஷ்டங்களைச் சந்திக்க நேரும். இதில் மனமுடைந்து சிலர் அடுத்தடுத்து முதலீடு செய்வதையே தவிர்ப்பதும் உண்டு.
- சிலர், வரிச்சேமிப்பு தரும் முதலீடுகளில் மட்டுமே அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். இன்ஷூரன்ஸ் போன்ற சில வரிச்சேமிப்பு முதலீடுகள் நல்ல வருமானம் தருவதில்லை என்பது தெரிந்தாலும், புதிய வழிகள் தெரியாமல் அதையே தொடர்வார்கள்.
- நம் அனைவருக்குமே செலவுகள் சிறிதும், பெரிதுமாக வரிசை கட்டிக் காத்திருக்கும்; பணி ஓய்வை சந்திக்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற குழப்பம் இருக்கும். கையில் பணம் இருந்தாலும் எந்த இலக்குகளுக்கு எவ்வளவு, எங்கே சேமிக்க வேண்டும்; எத்தனை காலம் பொறுத்தால் நல்ல வருமானம் கிட்டும் என்பது போன்ற விஷயங்களில் தெளிவு இருக்காது.
- வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் பொருளாதார விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். யார் கூறுவது சரி, எந்த வழியைப் பின்பற்றலாம் என்பதில் மனஒற்றுமை வராமல் எந்த வழியையுமே பின்பற்ற முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதுபோன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் ஆலோசகர்களின் உதவி கைகொடுக்கும்.