பான் கார்டு அவசியமாவது ஏன்?
பான் கார்டு ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருமான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.
நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத் தக்கது அல்ல. முகவரி மாறினா லோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்கு கிறது. பான்கார்டு பயன் படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.
இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம். ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.