இன்ப்ளூயன்சர் மார்க்கெட்டிங் தெரியுமா…?
சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்களை ‘இன்ஃப்ளூயன்சர்’கள் என்பார்கள். இந்த ‘இன்ஃப்ளூயன்சர்’களை ஒரு பிராண்டை சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்துவதன் மூலம், அந்த பிராண்ட் மக்களை எளிதில் சென்றடையும். மேலும், ‘இன்ஃப்ளூயன்சர்’களும் வருமானம் ஈட்டும் மார்க்கெட்டிங் டெக்னிக் தற்போது டிரெண்டாக உள்ளது. பிரபல நடிகர், நடிகைகளை ‘இன்ஃப்ளூயன்சர்’கள் என்பதைத் தாண்டி மக்கள் அவர்களை ‘செலிபிரெட்டி’களாகக் கொண்டாடுகிறார்கள். அதனால் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களுக்கு எப்போதும் இருக்கும்.
காசு பார்த்த நடிகைகள்
குறிப்பாக நடிகை நயன்தாரா எந்த சமூக வலைதளங்களிலும் தனி அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை. பெரும்பாலும் பேட்டி எதையும் தருவதில்லை. அடிக்கடி எந்த அவார்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அதனால் நயன்தாரா பற்றிய செய்தி பகிரப்படும்போதெல்லாம் மக்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு மக்களின் ஆர்வத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, திருமணம் என்னும் மையப்புள்ளியில் நிறுத்தி, அதை பிசினஸாக மாற்றியிருக்கிறார்கள்.
‘இப்படி திருமணத்தைக் கூட விற்று காசு பார்க்க வேண்டுமா’ என்பது பல நெட்டிஷன்களின் கருத்தாக இருந்தது. வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், அதை பிசினஸாக மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. இது அந்தத் தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பமும்கூட, மேலும், இதனால் கூட்ட நெரிசல் இருக்காது. சில ஆண்டுகள் முன்பு சினேகா – பிரசன்னா தங்களுடைய திருமண வீடியோக்களை ஒளிபரப்ப ஒரு சேனலுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப நயன் ஓ.டி.டி தளத்தில் தன்னுடைய திருமண வீடியோ கவரேஜை விற்பனை செய்துள்ளார்.
வருமானம் பார்க்கும் நிறுவனங்கள்
இந்தத் திருமண வீடியோவை ஒளிபரப்ப நயன் பல கோடிகள் வாங்கியிருப்பதாகச் சொல்லப் படுகிறது. வீடியோ மூலம் வரும் வருமானம் என்பதைத் தாண்டி, நயன்தாரா – விக்னேஷ் திருமணத்தன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் திருமண ஆடை, அணிகலன்கள், அவர்களுக்கு ஸ்டைலிங் செய்தவர்கள், ஈவென்ட் பிளானர் என எல்லோரையும் ‘டேக்’ செய்திருந்தனர். இதிலும் பிசினஸ் நுணுக்கங்கள் இருக்கிறது. அவர்கள் ‘டேக்’ செய்திருந்தவர்களின் சமூக வலைதள பக்கத்தை மக்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
அதன் மூலம் அந்த பிராண்டுக்கு புதிய கஸ்டமர்களோ, ஃபாலோயர்களோ வர வாய்ப்பு உண்டு. இவ்வாறு ‘டேக்’ செய்வதற்குக் கட்டணம் வாங்கியிருக்கலாம். அல்லது சிலவற்றை ‘ஸ்பான்ஸர்’ வாங்கி இருக்கலாம். எனவே, அதிலும் வருமான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
எப்போதும் நமக்கென இருக்கும் தனித்துவத்தை மூலதனமாகக் கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும் என்றார் நயன், அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.